
மனிதர்களின் சுயசிந்தனையை நிர்மூலமாக்கும் முயற்சிதான் அந்த யுத்தம்.
அதில் பெரும்பாலும் சுயசிந்தனை தோற்ற வண்ணம்தான் உள்ளது. வெளிப்பார்வைக்கு மனிதரின் சுயசிந்தனை வெற்றி பெற்று உள்ளதாக தெரிகிறது.
சில சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் வெற்றியை பெற்று இருக்கிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்பங்களில் சுயசிந்தனை தனது இருப்பை தொலைத்துவிட்டு திண்டாடிகொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஏராளமான உதாரணங்கள் கூற முடியும். அவற்றை விலாவாரியாக எழுதினால் வாசிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கும். எனவே அதன் அடிப்படையான சில தகவல்களை பற்றி மட்டும் தற்போது அலசுவோம்.
இயற்கையின் மிக அழகான வெளிப்பாடுகளில் மனிதர்களும் ஒரு அற்புத படைப்பே.
இங்கே மனிதர்கள் என்று குறிப்பிடும் பொழுது மனிதர்களின் மனம் உடல் இரண்டையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன். ஆத்மாவை பற்றிய கேள்வியை கட்டுரையின் முடிவில் பார்ப்போம்.

மனம் ஒரு மொழிபெயர்ப்பாளர். நாம் காணும் அல்லது கேட்கும் அல்லது ஏதோவொரு புலன்வழியாக உணர்பவற்றை அறியத்தருவது மனம்தான்.
இந்த மனம் எவ்வளவு தூரம் செயலிழந்து போகிறது அவ்வளவு தூரம் நாம் சுய செயல் அற்றவர்கள் ஆகிவிடுவோம்.
ஒருவரை சுயமாக சிந்திக்க செயல்பட முடியாதவாறு அவரின் மனதை கட்டுப்படுத்தி விட்டால் அவர் ஒரு உயிரற்ற பொருள் போலாகிவிடுவார்.
மனம் ஏதோவொரு விடயத்தில் தனது சுயத்தை இழந்து விட்டால் அது ஒரு பெறுமதி அற்ற மனம் என்று ஆகிவிடுகிறது.