Sunday, May 25, 2014

பயம் வாழ்வை கொண்டுவராது முடிவைத்தான் கொண்டுவரும், அன்புதான் வாழ்வை கொண்டு வரும் .

எண்ணங்களை விருப்பங்களை தீர்மானங்களை மறைப்பது நமது
சுபாவமாகும் . தவிர்க்க முடியாத நேரங்களில்  மறைப்பது நல்லது என்று நாம் வாதிடகூடும்.
மனிதர்கள் அடிப்படையில் மிகவும் பயந்த ஒரு ஜீவராசியாகும் .
நாம் ஆதியில் வேட்டை ஆடும் கலாசாரத்தை கொண்டிருந்தோம் . அதன் தாக்கம் இன்னும் எமது மனதில் உறங்கி கொண்டுதான் இருக்கிறது.
அதனால்தான் நாம் மிகவும் பயந்த ஒரு பிராணியாக இருக்கிறோம். ஆனால் எமது பயத்தை  வெளியே காட்டி கொள்ளாமல் நடிப்பதில் மிக பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்து விட்டோம்.
எமது மனதில் சதா தோன்றும் சிறு சிறு சலனங்களும் கூட பயத்துடன் கலந்தே வருகிறது.
நாம் என்னதான் அறிவு பண்பு  என்றெல்லாம் நீட்டி முழக்கினாலும். நாம் என்னவோ எல்லாவற்றிகும் பயபடுகிறோம்.
இந்த FEAR FACTOR எம்மை சரியான பாதையில் பயணிக்க விடாது,
பயம் என்பது ஒரு சாதாரண உணர்வு அல்ல.
இது ஒரு முக்கியமான காந்தம் போன்ற உணர்வு.  அடுத்த முக்கியமான உணர்வு அன்பு ஆகும் .
நமது சகல எண்ணங்களும் கருமங்களும் பேச்சுக்களும் ஒன்றில் அன்பின் அடிப்படையானதாக இருக்கும் , அல்லது பயத்தின் பால் பட்டதாக இருக்கும்.
இவை இரண்டில் ஏதாவது ஒரு உணர்வின் அடிப்படையிலே நமது சகல காரியங்களும் எண்ணங்களும் உருவாகுகின்றன.
அன்புக்கும் பயத்திற்கும் இடையே நடக்கும் நிரந்தர யுத்தம் எமது ஒவ்வொரு உணர்ச்சியிலும் நடை பெறுகிறது.
எப்பொழுதெல்லாம் அன்பு  வெல்கிறதோ அப்போதெல்லாம் நாம் மகிழ்ச்சியாக வெற்றிகரமாக வாழ்கிறோம்.
 ஆனால் துரதிஷ்ட வசமாக அன்பு அதிகம் வெல்வதில்லை .
பெருவாரியான தருணங்களில் எமது பயம் தான் வெல்கிறது. ஏனெனில் நாம் வாழும் இன்றைய உலகம் பெரும்பாலும் பயத்தின் அடிப்படையிலேயே கட்டி எழுப்பட்டிருக்கிறது.
நாம் அன்பு  காதல்  பாசம்  நேசம்  என்றெல்லாம்  வெளிப்படுத்திகொள்ளும் பலதருணங்களில்  உண்மையில்  அந்த அன்பின் முகமூடியை அணிந்து கொண்டு எமது பயத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறோம்.

எது பயத்தின் அடிப்படை எது அன்பின் அடிப்படை என்று கண்டு பிடிப்பது மிகவும் கடினம் .
அன்பு முகமூடியை பயமானது அநேக தடவைகளில் முன்னே தள்ளிக்கொண்டு தான் அதற்குள்ளே மறைந்து கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறது
அந்த அழகான அன்பு முகமூடியை sponsor செய்கிறது,
அதனால்தான் எந்த எண்ணத்திற்கும் அதன் அத்திவாரத்தை sponsor செய்த உணர்வை நுட்பமாக கண்டு பிடிக்க வேண்டும ,
அந்த sponsoring thought பயத்தின் அடிப்படையாக இருந்தால் அது நமக்கு நல்லதல்ல என்பதை ஏற்றுகொள்ளவேண்டும்

பயமானது மிகவும் தந்திரமாக  ஒளித்து விளையாடி கொண்டே இருக்கும்,
உதாரணமாக நாம் ஒரு காரை அதன் அழகில் ரசித்து வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம் . அதன் அழகை ரசித்து வாங்கி இருந்தால் நிச்சயமாக அது அன்பின் அடிப்படையில் எழுந்த ஒரு எண்ணம் என்று கூறலாம் .
ஆனால் அந்த கார் நம்மிடம் இருந்தால் நமக்கு ஒரு அந்தஸ்து கிடைக்கும் என்று அடிமனதில் கணக்கு போட்டு கொண்டு வாங்கினால் அது நிச்சயம் பயத்தின் அடிப்படையில் எழுந்த எண்ணம்தான்.
முக்கியமாக நமது குடும்ப உறவுகளும் நட்புகளும் பெருபாலும் பயத்தின் அடிப்படையில் அமைவது மிகவும் கவலைக்கு உரியதாகும்.
ஏராளமான உறவுகள் கசந்து போவதன் காரணம் இதுதான்.
கணவனை மடக்கி வைத்திருக்க வேண்டும் என்று மனைவி எண்ணுவதும் .
மனைவியை மடக்கி வைத்திருக்க வேண்டும் என்று கணவன் எண்ணுவதும்  பயத்தின் அடிப்படையினால்தான் .
பயத்தின் மீது கட்டி எழுப்ப பட்ட கட்டிடம் பலமானது போல தோன்றும்  ஆனால் அது  மிகவும்  மோசமாக இடிந்து விழுந்துவிடும் .
அதுதான் விவாகரத்து வழக்குகள் பார்க்கிறோமே ?
மாறாக திருமண பதிவே இல்லாத காலத்தில் மிகவும் பாமரர்களாக வாழ்ந்த நம் முன்னோர்கள் ஓரளவு அன்பின் அடிப்படையிலேயே வாழ்ந்தார்கள் என்றுதான் தோன்றுகிறது.
அவர்களுக்கு பயம் குறைவு.
அந்த காலத்தில் நம்மை பயமுறுத்தும் சமுகம் அந்தஸ்து போன்ற கட்டுமானங்கள் அவ்வளவு  பிரமாண்டமானதாக இருந்திருக்கவில்லை.
நாகரீகம் என்ற போர்வையில் நாம்  பயம் என்ற கோட்டையை கட்டி வைத்துவிட்டு அதற்குள்ளே கைதிகளாக இருக்கிரோம் .
இதை கண்டு பிடிப்பதற்கு நாம் ஒன்றும் ஐன்ஸ்டீனாக இருக்க வேண்டியதில்லை.
சமுகத்தின் மிக நாகரீகமாக நடை உடை பாவனைகளை கொண்டிருக்கும் எவரை பார்த்தாலும்  அவர் எதற்கு எதற்கெல்லாமோ பயப்படுகிறார் என்பது புரியும்
நாகரீகம் என்ற பொறி முறையில் நாம் அளவுக்கு அதிகமாக வே  பயத்தை உற்பத்தி செய்துவிட்டோம்.
அதனால் அன்பு பின் தங்கி விட்டது.
அன்பு இல்லாத இடத்தில மகிழ்ச்சி இல்லை
பயம் வாழ்வை கொண்டுவராது முடிவைதான் கொண்டுவரும்,
அன்புதான் வாழ்வை கொண்டு வரும் .


No comments: