
அடிப்படையில் எனக்கு பொறுமை இல்லை. தெரிந்ததை அல்லது நான் நம்புவதை எவ்வளவு விரைவாக வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக வெளிப்படுத்துவது. எனது சுபாவமாகும் .

காலாகாலமாக நாம் எமது உடலுக்கு உரிய முதல் இடத்தை கொடுக்கவில்லை. அனேகமாக கடவுளுக்கு அல்லது நமது வழிகாட்டி குருவானவர் போன்றவர்களுக்கு முதல் இடத்தையும் அல்லது நமது ஆத்மாவுக்கு முதல் அல்லது இரண்டாவது இடத்தையும் கொடுத்து வந்துள்ளோம்
உண்மையில் எமது உடலுக்கு மிகவும் கீழான ஒரு ஸ்தானத்தையே வழங்கி வந்துள்ளோம்.

இது உண்மையில் மிகவும் மோசமான தவறான கோட்பாடாகும்.
உடலை மேன்மை படுத்தாமல் ஆத்மாவை அல்லது கடவுளை மேன்மை படுத்துவிட்டோம்.
ஆத்மா அல்லது கடவுள் என்று ஒன்றுமே இல்லை என்று நான் கூறவரவில்லை.
ஆனால் இங்கே இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது எமது உடல் மூலம்தான் .
எமது பிறவியின் நோக்கமும் இந்த அற்புதமான உடல் மூலம் இந்த வாழ்வை வாழ்ந்து எம்மை சுற்றி உள்ள அற்புதங்கள் எல்லாவற்றையும் ரசித்து மகிழ்வதற்கே.


கண்ணுக்கு முன்பே தெரியும் அற்புதத்தை அழகை ரசிக்க மறந்து எங்கே எப்போதோ யாரோ சொன்ன அம்புலிமாமா கதைகளை நம்பி எல்லோரும் சென்று கொண்டிருக்கிறார்கள் போல தான் தெரிகிறது.
சொல்லப்பட்ட கதைகள் எல்லாம் இரவல் கதைகள்தான்.
ஒருவரினதும் சொந்த அனுபவமோ சொந்த புத்தியோ இல்லை என்பதை இங்கே நான் குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது.
நான் சொல்வது மட்டும் இரவல் அனுபவம் இல்லையா என்று நீங்கள் கேட்டால் அது மிகவும் நியாயமான கேள்விதான்.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பதில் சொல்லவேண்டியது எனது கடமை.
ஆம் எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேன்.