
அரசன் ஆண்டவன் குரு போன்ற சொற்கள் எல்லாமே அனேகமாக மனிதர்களின் பயத்தை அடிப்படையாக வைத்து அவர்களின் சுய தேடலை சிறுமை படுத்திய ஒரு சமாச்சாரமாகவே காணப்படுகிறது .

ஆனால் உனக்கு நான் அறிவு தருகிறேன் பேர்வழி அதற்கு பிரதிகூலமாக நீ உனது உடல் பொருள் ஆவி எல்லாம் என் முன்னே சமர்பிக்க வேண்டும் எதிர்பார்க்கும் குரு அல்லது ஆண்டவன் அல்லது அரசன் எல்லாமே எமக்கு உண்மையில் சரியான வழியை காட்டவில்லை .
இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ஜீவராசியும் தங்கள் வாழ்வுக்கும் இருப்புக்கும் உரிய சகல தன்மைகளுடனேயே பிறந்து இருக்கின்றன ,
அதை மறுக்கும் வேலையை தான் அநேகமான குரு என்பவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள் , சுயசிந்தனை செய்வதே ஏதோ ஒரு பாபகரமான காரியம்போல் அடிமைத்தனத்தை போதிக்கிறார்கள். உடல் ரீதியான அடிமைதனத்தையோ அல்லது பொருள் ரீதியான அடிமைதனத்தையோ விட உளவியல் ரீதியான அடிமைத்தனமே மோசமானது . இந்த புத்திரீதியான அடிமைத்தனம் intellectual slavery படித்தவர் பாமரர் பேதமில்லாமல் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கிறது .
சுயமாக தன்னைபற்றிய சுயதேடலுக்கு மிகவும் பயப்படும் அடியவர்கூட்டமாக மனிதர்கள் பலரையும் மாற்றிவிட்டார்கள் இந்த குரு சாயம் பூசிய கபட வேடதாரிகள்
ஆத்மீக குரு என்று தன்னை தானே விளம்பரப்படுத்தி கொள்ளும் அத்தனை குருமாரும் தாங்கள் ஏதோ எல்லாவிடயத்திலும் ஒரு பிறப்புரிமை அல்லது ஒரு விதமான தெய்வீக உரிமை கொண்டவர்கள் என்று எண்ணிக்கொண்டு ஒரு சர்வாதிகாரியாக நடந்து கொள்கின்றனர்
செயற்கையாக பாவனை பண்ணிகொண்ட ஒரு சாந்தம் ஒரு செயற்கையான புன்னகை போன்ற சகல மேனா மினுக்கி தனங்களோடு சதா எத்தனை சிஷ்யர்கள் அல்லது அடியவர்கள் வருகிறார்கள் என்று தணியாத தாகத்தோடு இருக்கும் இந்த குருமார்கள் தங்கள் ego வை திருப்தி படுத்த சதா வாடிக்கையாளர்களை தேடி அலைகின்றனர் .
உண்மையான குருவே இல்லையா என்று நீங்கள் கேட்பது புரிகிறது ,
இந்த பரந்த விரிந்த உலகத்தில் எல்லாமே ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து ஒன்றோடு ஒன்றுக்கு உதவி புரிந்தே தமைந்து இருப்பை தக்க வைத்து கொள்கின்றன .
அறிவை பகிரும் ஆற்றலை நுட்பத்தை சகல ஜீவராசிகளும் தங்களுக்கு பொது மான அளவில் இயல்பாகவே கொண்டுள்ளன,
ஒரு மரத்தை விட நீ ஒன்றும் பெரிய புத்திசாலி இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்
மரமானது தனக்கு தேவையான அறிவுடனும் ஆற்றலுடனும் தான் அவதரித்து தன இருப்பை தக்க வைத்து வாழ்கிறது . அதுபோலவே நீயும் உனக்கு தேவையான அறிவுடனும் ஆற்றலுடனும் அவதரித்து உன் இருப்பை தக்கவைத்து வாழ்கிறாய் .நீயா பெரிது அல்லது மரமா பெரிது என்று ஒன்றும் இல்லை நீயும் பெரிதுதான் மரமும் பெரிதுதான்.