Monday, January 29, 2018

தியானம் ஒரு பித்தலாட்டம் ... வாழ்வின் மீதான காதலை அழிக்க சொல்லும் மோசடி!

தியானம் மென்மையானது அற்புத சக்திகளை தரவல்லது, மேலான பேரானந்தத்தை தரவல்லது என்று  அனேகமாக  எல்லா மதங்களும் எல்லா வழிகாட்டிகளும் கூறுகிறார்கள் .
அதை  மறுத்து கூறுவது பற்றி சிந்திக்க கூட முடியுமா என்று பலரும் எண்ணக்கூடும்.. தியானத்தை புனிதப்படுத்தி அதைப்பற்றி ஆராய்வதே ஒரு பாவகாரியமாக்கி விட்டார்கள்.

நீண்ட காலமாக மீண்டும் மீண்டும் கூறுவதால் மட்டும் அது பற்றி நாம் பூரணமாக விளங்கி இருக்கிறோம் என்று அர்த்தம் கொள்ள முடியாது.
தியானம் எல்லோரும் கூறுவது போல அது எந்த தீமையும் இல்லாத ஒரு நல்ல பயிற்சி அல்லது முயற்சி அல்லது பாதை என்று நான் கூறமாட்டேன்.
தியானத்தால் அடையக்கூடிய உயர்ந்த பேரானந்த பெருநிலை என்று விதம் விதமாக நூல்களும் உபதேசகர்களும் கூறும் அந்த நிலையை நான் பல வருடங்களுக்கு முன்பு அனுபவித்திருக்கிறேன் என்பதால் அதைப்பற்றிய எனது கருத்து வெறுமனே புத்தகங்களில் இருந்து பொறுக்கியதோ அல்லது பல சுவாமிகள் வழிகாட்டிகளிடம் இருந்து பெற்ற தகவல்களோ அல்ல.
நான் இங்கே எழுதுவது எனது சொந்த அனுபவத்தில் நான் அறிந்த விடயங்கள்தான்.

மீண்டும் மீண்டும் தியானம் என்பது உலகிலேயே மிகவும் உயர்ந்த உன்னதமான விடயம் என்று கூறப்படுவதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது .
அது என்னவென்றால் மனதின் வேகத்தை குறைத்து கொஞ்சம் அமைதியை தருகிறது . அந்த அமைதியின் காரணமாக உடலின் ஆரோக்கியய்த்தில் சில நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன. ஆனால் பல தடவைகள் தியானம் செய்வதாலேயே பல விதமான மன உளைச்சலும் உடல் ஆரோக்கியம் கெடும் சந்தர்ப்பங்களும் உண்டு, அவற்றை பற்றி விளக்குவது எனது நோக்கம் அல்ல.
கால்களால் நடப்பதை விட கைகளால் நடப்பதற்கு விசேஷ திறமையும் பயிற்சியும் வேண்டும். ஆனால் அதனால் என்ன பயன் ?
அது போன்ற தேவையே இல்லாத சில இயற்கைக்கு மாறான சில சக்திகள் தியானத்தால் பெற முடியும் என்பது உண்மையே .
ஆனால் அவை எல்லாமே இயற்கைக்கு மாறான திறமைகளே. அவற்றால் ஒரு பிரயோசனமும் இல்லை,
உதாரணமாக தண்ணீரில் நடப்பது அதிசயமானதுதான் ஆனால் அதனால் என்ன பெரிய பிரயோசனம் வந்து விடப்போகின்றது?
ஆனால் அந்த சித்தியை அல்லது திறமையை பெறுவதற்கு ஒரு தியானி இழக்கும் விடயங்கள் ஏராளம்.
இந்த இடத்தில்தான் நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டி இருக்கிறது.
தியானம் செய்து பேரானந்தம் வரப்பெற்றதாக கூறுபவர்கள் உண்மையில் மிகவும் இனிமையான இந்த உலகத்தை ரசிக்கும் அற்புத வாய்ப்பை இழந்து விடுகிறார்கள் .

Thursday, October 26, 2017

ரீமிக்ஸ் ஆத்மீக வியாபாரம் ... சுகி சிவம் ... தீபக் சோப்ரா !

சமணம் . பௌத்தம், மற்றும் ஏராளமான் சிறிய பெரிய  வழக்கொழிந்து
போய்விட்ட   சமயங்கள் சார்ந்த கோட்பாடுகள் எல்லாம் தற்போது  இந்து சமயம் என்ற பெயரில்  இருக்கிறது.

நவீன விஞ்ஞான உலகத்துக்கு சமய நம்பிக்கைகள்  மீது ஒரு  அவநம்பிக்கை  இருக்கிறது.
நம்பிக்கை இருப்பதாக பாவனை பண்ணும் பலருக்கும் சந்தேகங்கள்தான் அதிகமாக இருக்கிறது ,
ஆனால்  நடித்து கொண்டிருக்கிறார்கள்.
 அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
கடந்த நூற்றாண்டுகளில் இருந்து விஞ்ஞான அறிவு மிகபெரும் அளவில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
மறு புறம்  எல்லாவிதமான தத்துவங்களும் மீள் பரிசோதனைகளுக்கு உட்பட்டு கொண்டே இருக்கிறது.
மனிதர்கள் கொஞ்சம் சுயமாக சிந்திக்க தொடங்கி உள்ளார்கள்.
மேலை நாடுகளில் மனிதரின் பிறப்பு. இறப்பு மட்டும் அல்லாது , இந்த பிரபஞ்சம் இயங்கும் விதிகளை ஆராய்ந்து  பார்ப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
Darwin , Fredric Neitche, Sigmande Freud போன்றவர்கள் தத்துவார்த்த ரீதியிலான புரட்சியை சமகாலத்தில் தொடக்கி வைத்தார்கள் என்றே கூறலாம்.
இவற்றின் வழி பல புதியவர்கள் பல நூல்களை எழுதினார்கள் .
அவற்றில் மிக ஆழமான புரட்சிகரமான பிரபஞ்சவியல் ஆய்வு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில்  எதை குறிப்பிடுவது எதை விடுவது என்ற குழப்பம் எனக்கு உள்ளது.
ஏனெனில் மிக நீண்ட பட்டியலை குறிப்பிடுவது வாசர்கர்களின் பொறுமையை சோதித்து விடுமோ என எண்ணுகிறேன்.
 Jane Roberts என்பவர் எனக்கு  முக்கியமானவர் . இவர் ஏராளாமான நூல்களை அளித்துள்ளார் .

Tuesday, October 24, 2017

ஆத்மீக / மத பேச்சாளர்களின் நவீன விஞ்ஞான பக்தி காக்டெயில் விஸ்கி பிரசாதம் !

தற்போது எல்லா சமயவாதிகளும் தங்கள் பிரசார  தந்திரங்களை  கொஞ்சம்
நவீன மயப்படுத்தி உள்ளார்கள்.
ஜெஹோவா சாட்சிகள்தான் முதல் முதலாக சுய முன்னேற்ற கருத்துக்களை தங்கள் கர்த்தரோடு மிக்ஸ் பண்ணி கொடுத்தவர்கள்,
இப்போது எல்லோரும் இதே டெக்னிக்தான்.
 டபிள் ஸ்ரீ , ஜாக்கி வாசு  போன்ற பார்ப்பனீய கொள்கை பரப்பு செயலாளர்கள் மட்டுமல்லாது உலகில் உள்ள அத்தனை சமயத்தவர்களும் புதிய உலகின் சிந்தனைக்கு ஏற்ப விஞ்ஞான ரீதியான விளக்கங்களோடு ரீல் சுத்துகிறார்கள்.
பல நேரங்களிலும் இவர்கள் கூறும் கருத்துக்கள் நல்லவையாக இருக்கிறது உண்மையே .
ஆனால் இவர்களது நோக்கம் மிகவும் கபடம் வாய்ந்தவையாகும்.
அதனால்தான் இவர்கள் இன்னும் சீனில் நின்று பிடிக்க முடிகிறது. பழைய சினிமா பாடல்களை ரீமிக்ஸ் செய்து இளம் தலைமுறைகளின் காதுகளில் தங்கள் சொந்த சரக்கு போன்று சப்பிளை செய்வது போல இந்தசமய  சொற்பொழிவாளர்களும் இப்போது செய்கிறார்கள் .
 பேரறிஞர்கள் பேசியதை எழுதியதை எல்லாம் தேடி பிடித்து அவற்றை அங்கொன்றும் இங்கொன்றுமாக அள்ளி வீசி தங்கள் பழைய குப்பைகளை புதிப்பிக்கின்றனர்,
வழக்கம் போல பொதுபுத்தி மக்கள் ஆகா கண்டேன் அறிவின் கருவூலத்தை என்பது போல இந்த சமய வியாபாரிகள் பின்னால் செல்கின்றனர் . இந்த பக்தி சரணாகதி உல்டாக்கள் எல்லாம் வெறும் ரீமிக்ஸ் ஆத்மீக போதை வஸ்துக்கள்தான்.

Tuesday, July 4, 2017

சுயமாக சிந்திப்பது பாவம் ஏதாவது ஒரு தலைவனை அல்லது சாமியாரை நம்பி கண்ணை மூடுங்கள் சொர்க்கம் நிச்சயம்

சாமியார்கள் வழிகாட்டிகள் மகரிஷிகள் குருமகராஜிகள் பகவான்கள் பகவதிகள் அம்மாசாமியாரினிகள் எல்லாரும் எப்படியாவது மக்களை காப்பாற்றியே தீருவது என்று விடாப்பிடியாக முயற்சி செய்கிறார்கள். தாராளாமாக முயற்சி செய்யட்டும் .
உலகில் நடக்கும் கொலை கொள்ளைகளை எல்லாம் தடுத்து நிறுத்துவது என்ன நடைபெறக்கூடிய காரியமா?
சில கிரிமினல்கள் அகப்படுவார்கள் சிலர் அகப்படமாட்டார்கள். ஆனாலும் இயற்கையின் விஞ்ஞான விதி ஒன்று உண்டு அதில் எவரும் தப்ப முடியாது. ஊரையெல்லாம் ஏமாற்றுபவன் சொந்த வீட்டிலேயே ஏமாந்த கதையெல்லாம் உண்டு இந்த மாதிரி பித்தலாட்ட சாமிகளிடம் மக்கள் அதிக அளவில் ஈடுபடுகிறார்கள். இது உண்மையில் ஆராயப்பட வேண்டிய விடயமாகும். மிகவும் அறிவாளிகளாக படித்தவர்களாக ஏன் படு சுயநலவாதிகளாக இருப்பவர்கள்கூட இந்த மாதிரி முடிச்சவிழ்கி சாமியார் குருமார்களிடம் சிக்குப்பட்டு விடுகிறார்கள்.

 சுய சிந்தனை இல்லாமல் இருப்பது மிகவும் உயர்ந்த விடயமாக நமது மனதில் பதியப்பட்டு உள்ளது . சமயங்களும் கலாசாரம் என்று நாம் கூறிகொண்டிருக்கும் வாழ்க்கை முறையும் இந்த தவறை கால காலமாக செய்துவருகின்றன. சுயமாக சிந்திக்க தெரிந்தால் அவர்களை அடக்கி ஆளமுடியாதே? குருமார்கள் நிலைத்து நிற்பதே மக்களின் அறியாமையினால்தான். மக்கள் உண்மையை அறியாதவாறு சாமிகளும் ஆசாமிகளும் பல விதமான ஒழுக்க விதிகள் கோட்பாடுகள் எல்லாவற்றையும் பாமர மக்களின் தலையில் திணித்து வைத்துள்ளன.

Saturday, May 13, 2017

உனது உடலைவிட உனக்கு வேறு பெரிய சொத்து கிடையாது.


இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்கள் உடல்தான் அதிக பெறுமதி வாய்ந்த தலையாய சொத்தாகும்.  இந்த உலகத்தில் உனது உடலைவிட உனக்கு பெரிய சொத்து வேறு எதுவும் கிடையாது.
எனவேதான் எல்லா உயிர்களும் தங்கள் உடலை பாதுகாப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன.
ஆனால் மனிதர்கள் மட்டும் இந்த இயற்கை விதியில் இருந்து விலகி தங்களை ஏதோ ஒரு அடிப்படை அறிவாளிகள் என்பதாக எண்ணிக்கொண்டு தங்கள் உடலை தாங்களே மிகவும் பாரதூரமாக சிதைக்கின்றனர்.
மனித உடலின் பெறுமதியை மிகவும் மலினப்படுத்திய முதல் குற்றவாளிகள்  மதவாதிகள்தான்.
மதங்கள் உருவாக்கிய காலச்சாரம் பாரம்பரியம் போன்றவை எல்லாம்  மனித உடலுக்கு உரிய மரியாதையை வழங்கவில்லை.  உடலை விட ஆத்மா உயர்ந்தது அல்லது அந்த ஆத்மாவை விட கடவுள் பெரியது என்பதாகதான் எல்லா மதங்களும் மீண்டும்  மீண்டும் பிரசாரம் செய்கின்றன
இந்த மதங்களின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் தொடர்ச்சியான பிரசாரங்களால் மனிதமனத்தின் மிகவும் ஆழத்தில் தனது உடல் ஒரு பெறுமதி இல்லாத பொருள் என்ற எண்ணம் பதிந்து விட்டது.
மனிதர்களை நல்வழிக்கு அழைத்து செல்வதாக கூறிகொள்ளும் மதங்கள் இறுதியில் மனிதனின் உடலை வெறும் வழி தேங்காயை எடுத்து தெருவில் உடைப்பது போன்று மனிதர்களின் உடல் பற்றிய கரிசனையை குழி  தோண்டி புதைத்து விட்டன.
உலகில் உள்ள எந்த விலை உயர்ந்த அதி பெறுமதி வாய்ந்த சிலையையும் விட மனிதனின் உடல் அற்புதமான உயிருள்ள சிலையாகும்..
இறைவனை வணங்குவதை விட தமது உடலை முதலில் வணங்குவதே மிகவும் சரியான ஒரு வழிபாடாக இருக்கமுடியும். அதற்கு அடுத்ததுதான் மீது வழிபாடெல்லாம். உடல் இருந்தால்தானே உன்னால் மீதி வழிபாடெல்லாம் தொடர முடியும் !

Monday, November 14, 2016

Nothing ஐ அடைவதற்கு Things எல்லாவற்றையும் இழக்க சொல்லும் மோசடிதான் தியானம், ஞானம், முக்தி, மோட்சம்....

மனித குலவரலாறு தோறும் ஒரு தொடர்ச்சியான யுத்தம் நடைபெற்று கொண்டுவருகிறது.
மனிதர்களின் சுயசிந்தனையை நிர்மூலமாக்கும் முயற்சிதான் அந்த யுத்தம்.
அதில் பெரும்பாலும் சுயசிந்தனை தோற்ற வண்ணம்தான் உள்ளது. வெளிப்பார்வைக்கு மனிதரின் சுயசிந்தனை வெற்றி பெற்று உள்ளதாக தெரிகிறது.
சில சில அபூர்வமான சந்தர்ப்பங்களில் வெற்றியை பெற்று இருக்கிறது. ஆனால் பெரும்பாலான சந்தர்பங்களில் சுயசிந்தனை தனது இருப்பை தொலைத்துவிட்டு திண்டாடிகொண்டுதான் இருக்கிறது. அதற்கு ஏராளமான உதாரணங்கள் கூற முடியும். அவற்றை விலாவாரியாக எழுதினால் வாசிக்க கொஞ்சம் சிரமமாக இருக்கும். எனவே அதன் அடிப்படையான சில தகவல்களை பற்றி மட்டும் தற்போது அலசுவோம்.

இயற்கையின் மிக அழகான வெளிப்பாடுகளில் மனிதர்களும் ஒரு அற்புத படைப்பே.
இங்கே மனிதர்கள் என்று குறிப்பிடும் பொழுது மனிதர்களின் மனம் உடல் இரண்டையும் சேர்த்தே குறிப்பிடுகிறேன். ஆத்மாவை பற்றிய கேள்வியை கட்டுரையின் முடிவில் பார்ப்போம்.
மனம் software உடல் hardware. மனம் இல்லையேல் உடல் இல்லை.உடல் இல்லையேல் மனம் இல்லை.இரண்டுமே ஒன்றில் ஒன்று தங்கி வாழ்வு என்ற process இல் இயங்குவதே மனிதவாழ்வு எனப்படுகிறது.
மனம் ஒரு மொழிபெயர்ப்பாளர். நாம் காணும் அல்லது கேட்கும் அல்லது ஏதோவொரு புலன்வழியாக உணர்பவற்றை அறியத்தருவது மனம்தான்.
இந்த மனம் எவ்வளவு தூரம் செயலிழந்து போகிறது அவ்வளவு தூரம் நாம் சுய  செயல் அற்றவர்கள் ஆகிவிடுவோம்.
ஒருவரை சுயமாக சிந்திக்க செயல்பட முடியாதவாறு அவரின் மனதை கட்டுப்படுத்தி  விட்டால் அவர் ஒரு உயிரற்ற பொருள் போலாகிவிடுவார்.
மனம் ஏதோவொரு விடயத்தில் தனது சுயத்தை இழந்து விட்டால் அது  ஒரு பெறுமதி அற்ற மனம் என்று ஆகிவிடுகிறது.

Sunday, September 11, 2016

கடவுளும் மருந்தும் விலை உயர்ந்த பிராண்டுகள்....? இந்த இரண்டையும் விட நீங்கள் உயர்ந்தவர் ! நிமிர்ந்து நில்லுங்கள் !


நவீன வாழ்க்கை வட்டம் ஏனோ தெரியவில்லை பயத்தின் அடிப்படையிலேயே பெரிதும் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இந்த பய உணர்வு மனிதர்களின் இயல்பான ஆனந்தத்தை விழுங்கியே விட்டது.
இந்த வாழ்வு ரசித்து ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றல்லவா?

 அடிமனதில் தோன்றிய பயத்தின் காரணமாக மனதளவில் ஒழித்து வாழ்ந்து பழகி விட்டார்கள்.;
எதுவித காணரங்களும் இன்றியே பயந்து பயந்து ஒழிக்க இடம் தேடுகின்றனர்.
பயத்தின் காரணமாக சுயமாக சிந்திக்கும் பழக்கத்தை மனிதர்கள் பெரிதும் இழந்து விட்டார்கள். பயம் சிந்திக்கும் ஆற்றலை  கிள்ளி எறிந்துவிட்டது 
இந்த உலகை நேருக்கு நேர் பார்க்க பயந்து போய் ஒழித்து வாழ கண்டுபிடித்த முதல் பங்கர் குகைதான் சமயங்கள் அல்லது கடவுள்கள் என்பது.

அந்த குகைகள் தங்களது பாதுகாப்பு தொட்டில் என்று கருதுகின்றனர்.

அது தரும் தாலாட்டில் கண்ணை மூடிக்கொண்டு வாழ முயற்சிக்கின்றனர்.  இது சரியான வழி அல்லது பிழையான வழி என்று ஒருவித அபிப்பிராயத்தையும் நான் திணிக்க வரவில்லை. அது என் வேலை அல்ல.


மனதளவில் அந்த நிலக்கீழ் குகை வாழ்க்கையில் இருந்து பழகி விட்டார்கள்.
அதை விட்டு வெளியே வந்து பார்க்க பயந்த சமுதாயமாகி விட்டது.

 கற்பனைக்கு எட்டாத அற்புதங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபஞ்சம்  பற்றிய எந்தவித கருத்தும் இல்லாமல் பெருவாரியான மனிதர்கள்  வெறும் அடியவர்கள் ஆகிவிட்டனர்,
ஒரு போதும் உண்மையை  பார்க்க முடியாத அளவு  எங்கோ ஒரு தூரத்தில் இருக்கிறார்கள் .
மனதில் எந்த விதமான சந்தேகம் தோன்றினாலும் கைவசம் பதில்  வைத்திருக்கும் போலி மருந்துகள் சமய வியாபாரத்தில்  தாராளமாக  உண்டு.

Saturday, June 4, 2016

மரங்கள்தான் உண்மையான ஞானகுரு.... அவை உங்களுடன் பேசுவது புரிகிறதா?

நாம் வாழும் இந்த  பூமியை  பற்றி சரியான புரிதல்கள் நமக்கு இருக்கிறதா?

இவ்வுலகிற்கு உரிய வாழும் முறை பற்றி மரங்கள் சொல்வதை விட எந்த ஒரு குருவோ அல்லது வழிகாட்டியோ சிறப்பாக சொல்லி தரமுடியாது.
மரங்கள் தங்களின் சுயதர்மத்தை மிகவும் நேர்த்தியாக நிறைவேற்றுகிறது.
எந்த ஒரு குரு, வழிகாட்டி அல்லது சமுகத்துக்கு நல்ல காரியத்தை செய்திருக்கும் பெரியவர்களின் வாழ்க்கை வரலாற்றை கவனித்து பார்த்தால் அவர்கள் எல்லோருமே மரங்கள் செடி கொடிகளோடு மிகவும்  பரிச்சயம் உள்ளவர்கள்.
மனதை ஒரு முகப்படுத்தி தியானம் அல்லது சுயதேடல் முயற்சி உள்ள  பலர் மர நிழலில் அமர்ந்து இருப்பது வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பதை அறிவோம் .

புத்தர் மட்டும் அல்ல அவருக்கு முன்பிருந்தவர்களும் மரத்தின் நிழலில்தான் மன அமைதி பெற்றார்கள் என்பது வரலாறு.
இவற்றில் இருந்து நாம் மிகப்பெரும் பாடத்தை படிக்க வேண்டி உள்ளோம்.
இந்த உலகில் இருக்கும்  எல்லா பொருட்களும் எல்லா  செயல்களும்  உண்மையில் ஒரு  இயங்கு சக்தியின் வெளிப்பாடுதான்.
(இங்கே சக்தி என்றதும் யாராவது அம்பாள் என்று கருத்து கூற முயன்றால் அதற்கு நான் பொறுப்பல்ல  என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறேன்.)

Wednesday, April 13, 2016

பயம்...ஒரு எதிரி அல்ல....விளையாட வேண்டிய மைதானம் அது.

Santosh Patel: You think tiger is your friend, he is an animal, not a playmate.
Pi Patel: Animals have souls... I have seen it in their eyes. Animals don't think like we do! People who forget that get themselves killed. When you look into an animal's eyes, you are seeing your own emotions reflected back at you, and nothing else. ...life of pi quotes

பிராணிகளுக்கா அல்லது மனிதர்களுக்கா  பய உணர்வு மிக அதிகம்?
மனிதர்களுக்குதான் பய உணர்வு அதிமாக இருக்கிறது!
மனிதர்கள் ஏன் பிராணிகளை விட அதிகமாக பயப்படுகிறார்கள்?

இந்த கருத்து  உண்மையா என்ற சந்தேகம் உங்களுக்கு ஏற்படவும் கூடும். அடிப்படையில் மனிதர்களும் பிராணிகளும் பல சந்தர்ப்பங்களில் பயம் என்ற பொறிக்குள் அகப்படவேண்டிதான் உள்ளது. 
பயம் உண்டாவதற்கான காரணங்களும் ஏராளமாக உள்ளன.

மனிதர்களின் பய உணர்வுக்கும் பிராணிகளின் பய உணர்வுக்கும் இடையே  உள்ள வேறுபாடு என்னவென்றால் அந்த பயத்தை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் பிராணிகள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதில்தான் உள்ளது.

Saturday, April 2, 2016

"ஆத்மீக அறிவு ஒரு பிரமிட் மோசடி "..... அரசியல், வர்த்தகம், கலை, சமுகம், சமயம்....கேள்வி கேள்...சவால் விடு...


உண்மையை தேடல்  என்றாலே அது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஆத்மீக உண்மையை தேடி ஆராயும் முயற்சி என்றாகிவிட்டது.
உண்மை என்பது உண்மை மட்டுமே. அதில் ஆத்மீக உண்மை அரசியல் உண்மை என்பதெல்லாம் கிடையாது.
சில பெரியவர்கள் ஆத்மீக உண்மை வேறு இதர உண்மைகள் இதர துறைகள் எல்லாம் அநாத்மீகம் என்பதாக கூறுவார்கள்.

இது ஒரு சௌகரியமான பொய்யான முகமூடியாகும்.

நான் சதா மனித வாழ்வின் மர்மங்களை ஆராய்ச்சி செய்பவன்.

என் கண்முன்னே நடக்கும் அரசியல் சமுக நிகழ்வுகளையும் சரி கலை கலாச்சாரத்தையும் சரி மிகவும் ஆர்வத்துடன் படிப்பவன்.
அதில் ஈடுபாடும் கொள்பவன்.
இந்த அதிசயமான உலகில் என்னதான் நடக்கிறது  என்பதை  அறிவதில் அனுபவிப்பதில் எனக்கு  அதீத விருப்பம்.

Tuesday, February 9, 2016

கனவுக்கு ஒரு பாலம்......அங்கே உங்களின் ஒரு விசுவரூபத்தை நீங்கள் தரிசிப்பீர்கள்.

கனவுகள் உண்மையானவையா?
இறந்தவர்களுடன் பேச முடியுமா?
ஒருவரோடு ஒருவர் மனத்தால் பேசமுடியுமா?
எதிர்காலத்தில் சந்திக்கபோகும் ஒருவருடன் இப்போதே பேசிக்கொண்டு இருக்கிறோமா?
நேரில் பரிச்சயம் இல்லாத ஒருவரோடு நாம் மனத்தால் பேசமுடியுமா? அல்லது பேசிக்கொண்டுதான் இருக்கிறோமா?
எல்லாவற்றிக்கும் பதில்கள் ஒன்றுதான். ஆம் ஆம் ஆம் .
இந்த கேள்விகள் எல்லாமே சாத்தியம் அற்ற கேள்விகளாக தோன்றக்கூடும்.
உண்மையில் இவை எல்லாமே நிச்சயம் சாத்தியமான விடயங்கள்தான்.
இன்னும் சரியாக சொல்லப்போனால் நாம் எம்மை அறியாமலேயே அடிக்கடி செய்துகொண்டிருக்கும் விடயங்கள்தான் இவை.

Wednesday, January 20, 2016

இயற்கை விதிகளை அறியாமல் நாம் இயற்றிய விதிகள்......

Stephen Hawking says humanity is inching closer to demise, and we are to blame.
We are not going to stop making progress, or reverse it, so we have to recognize the dangers and control them. I'm an optimist, and I believe we can,"  he said.
எமது வாழ்வும் இந்த பிரபஞ்சத்தின் வாழ்வும் ஒன்றில் ஒன்று தங்கியே உள்ளன. இந்த பிரபஞ்சம் என்று நான் குறிப்பிடுவது எம்மை சுற்றி உள்ள இந்த உலகத்தைத்தான்.
எமக்கும் இந்த பிரபஞ்சதிற்கும் உள்ள இயற்கை விதிகள் ஒன்றுதான்.
எமக்கு முன்பாக நடந்து செல்லும் ஒரு வழிப்போக்கனும் நானும் பிரிக்கவே முடியாத படி இணைந்துதான் இருக்கிறோம்.
விஞ்ஞான ரீதியாக மட்டும் அல்ல  மெய்ஞானம் என்று கூறுபவர்களின் கூற்றுப்படியும் இதுதான் உண்மை.
உண்மையில் நான் வேறு அவன் வேறு அல்ல ... அல்லது அவன் வேறு அது வேறு அல்ல.
சற்று முன்பு கூட அவனின் ஒரு அங்கமாக இருந்த பல நுண் அணுக்கள் எனது அங்கமாக சுழற்சி வேகத்தில் மாறிவிடுகிறது.
இது விஞ்ஞான ரீதியான உண்மையாகும்.
இந்த நுண் அணுக்கள் வெறும் பௌதீக சமாசாரம் மட்டும் அல்ல.
அவை ஒவ்வொன்றிலும் செய்திகள் உணர்வுகள் உள்ளன.

அவற்றில் உள்ள செய்திகள் , உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் என்பன சதா ஒரு பொருளில் இருந்து இன்னொரு பொருளுக்கு அல்லது இன்னொரு
ஜீவராசிக்கு மாறிக்கொண்டே இருக்கின்றன.

Tuesday, January 5, 2016

சந்தேகம் கொள்....கேள்வி கேள்...சிக்னல்களை சரியாக புரிந்து கொள்......

அழகை ரசிக்கும் ஆற்றல்  எல்லா ஜீவராசிகளுக்கும் உண்டு. அதன் வெளிப்பாடுதான் ஆண் பெண் கவர்ச்சியாக பரிணாம வளர்ச்சி அடைந்து உயிரனங்களின் வாழ்வுக்கும் அதற்கேற்ற வசதிக்கும் உரியதாக இன்றளவும் உலகம் இருக்கிறது.

இன்று நாம் நம்பிக்கை வைத்து பின்பற்றி வரும் கோட்பாடுகள் அல்லது
வாழ்க்கை முறை எல்லாம் எப்படி உருவானது?
பெரும்பாலும் இயற்கையின் அடிப்படை விதிகளை தூக்கி எறிந்து விட்டு சமயங்கள் கூறும் செயற்கையான பொய்யான கோட்பாடுகளின் அடிப்படையில்தான் பெரிதும் இன்றைய வாழ்வு அமைந்துள்ளது.

எமது தேவைகள் என்று எமக்கு தேவையே இல்லாத பல விருப்பங்களை எமது தலைமீது சுமத்தி எம்மை ஒரு பொதி சுமக்கும் கழுதைகளாக உருமாற்றி இருக்கிறது.
எமது உண்மையான தேவைகளை நோக்கி எம் உள்ளுணர்வுகள் ஓயாது குரல் கொடுத்து கொண்டு இருக்கையில் , அதற்கு நேர் எதிர்மாறாக எமது தலையில் சுமத்தப்பட்ட விருப்பங்களை நோக்கி நாம் மனத்தால் ஓடுகிறோம்.
விளைவு இரண்டுக்கும் நடுவில் மாட்டுப்பட்டு அவதிபடுகிறோம்.
எமது உள்ளுணர்வுக்கு நாம் ஒருபோதும் உண்மையாக இருந்ததே இல்லை. எனவே எமது உள்ளுணர்வுகளுக்கு இந்த வாழ்க்கை உகந்ததாகவே இல்லை.

Tuesday, December 8, 2015

நீங்கள் விரும்புவதும் நினைப்பதுவும் ஒன்றா? இதை உறுதிப்படுத்தினால் அது நிச்சயம் நிறைவேறும்...அது ஒரு ரகசியம் அல்ல ...

ஓடிக்கொண்டு இருக்கும் இந்த வாழ்கை ஒவ்வொரு கணமும் உங்களால் தீர்மானிக்கப்பட்டு உருவாக்க பட்டுக்கொண்டே ஓடுகிறது.
நிச்சயமாக உங்களின் வாழ்க்கை வேறு ஒரு சக்தியால்
தீர்மானிக்கப்படவில்லை,
இதை நம்புவது அல்லது ஏற்று கொள்வது மிகவும் கடினமான காரியமாகும்.
நமக்கு இந்த வாழ்க்கையை தீர்மானிக்கும் சக்தி இருந்தால் நாம் ஏன் எமக்கு விருப்பமான விதத்தில் எமது வாழ்க்கையை தீர்மானித்து உருவாக முடியாமல் இருக்கிறது என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாது,

எமது வாழ்க்கை  அல்லது எமது நோக்கம்  எமது விருப்பப்படியே  உருவாக்கப்படுகிறது எனில்,
ஏன் நாம் விரும்பியபடி எமது வாழ்க்கை  அமைவது இல்லை?

நிச்சயமாக நாம் விரும்பியபடிதான் எமது வாழ்க்கை அமையும்.
இதில் சந்தேகமே தேவை இல்லை,
நாம் எதை விரும்புகிறோம் என்பது மிகபெரும் உள்ளார்த்தம் உள்ள கேள்வியாகும்.
நாம் விரும்புவது என்று நாம் நினைக்கும் எல்லாவற்றையும் நாம் நிச்சயம் விரும்புகிறோமா?
நாம் விரும்பவில்லை என்று நாம் நினைக்கும் எல்லாவற்றையும் உண்மையில் நாம் விரும்பவில்லையா?
உதாரணமாக நாம் ஒருவரும் விபத்துக்கள் எமக்கு நடக்க வேண்டும் என்று விரும்புவதில்லை .
ஆனாலும் எமக்கு விபத்துக்கள் சிலவேளை நடக்கின்றதே?
அது எப்படி?
எமக்கு ஒரு விபத்து நடந்து விட்டால் அது எப்படி எமக்கு சம்பவித்தது?
நிச்சயமாக நாம் அதை விரும்பி இருக்க முடியாது.
நிச்சயம் நாம் அதை உருவாக்கி இருக்கவும் முடியாது.
எமக்குள் இருக்கும் எது அந்த விபத்தை எம்மை நோக்கி ஈர்த்தது?
நிச்சயமாக அந்த விபத்தை ஈர்க்கும்  ஏதோ ஒரு சக்தி எம்முள் இருந்துதான் உருவாக்கி இருக்கிறது.
எம்மை அறியாமலே நாம் உருவாக்கும் சக்திகளுக்கு இயங்கும் ஆற்றல் இருக்கிறது.

Saturday, November 21, 2015

பகுத்தறிவு பற்றி கொஞ்சம் பேசுவோம் வாருங்கள்!

கடந்த சில ஆண்டுகளாக என்னுள் ஆத்மீகம் பற்றிய பல கேள்விகள் 
உருவானது . அந்த கேள்விகள் உண்மையில் என்னை விடுதலை செய்தது என்றுதான் கூறவேண்டும்.
அடடா இதுவரை காலமும் எனது சிந்தனை என்று நான் எண்ணிக் கொண்டு இருந்தது உண்மையியல் ஒரு இரவல் சிந்தனைதான் என்று புரிந்தது,
கடவுள் இருக்கிறாரா இல்லையா?
கடவுள் என்று எதை நான் கருதுகிறேன்?
என்பது  போன்ற கேள்விகளில் இருந்து நான் கொஞ்சம் விடுதலையானேன்.
அதன் பின்பு சுயமாக சிந்தித்து பார்க்க தொடங்கினேன்,
சுயமாக சிந்தித்தல் அதாவது பகுத்து அறிதல் /பகுத்தறிவு என்பது நமது நாட்டில் எப்போதுமே அதிகம் கேட்டிராத ஒரு விடயமாகும்.
எப்போதும் சதா கந்தசஷ்டி கவசம் அல்லது கர்த்தர் ஊழியம் அதுவும் இல்லாவிட்டால் பள்ளிவாசல் எல்லாவற்றிகும் மேலாக புத்தமேடம்.
இவற்றை எல்லாம் தாண்டி மக்களை சிந்திக்க தூண்டுவது இலகுவான காரியம் அல்ல. அதனால்தானோ என்னவோ மக்களுக்கு மகிழ்வாக வாழ்வதுவும் கூட இலகுவான காரியம் அல்ல என்பதாகி விட்டது,
பகுத்தறிவு கருத்துக்களை நான் சிந்திக்க தொடங்கிய பொழுது எனக்கு சற்று குழப்பம் ஏற்பட்டது.
மேலை நாட்டு பகுத்தறிவு கோட்பாடுகள் அல்லது இயக்கங்கள் எல்லாம் தர்கீக பகுத்தறிவு கோட்பாடுகள் அல்லது அமைப்புக்களாக இருந்தன.

Saturday, October 31, 2015

உண்மையை பார்க்க மறுக்கும் பகுத்தறிவுவாதிகள்....


இன்றைய பகுத்தறிவு வாதம் என்பது சென்ற அல்லது அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் உருவான கருத்துக்களில் இருந்து கொஞ்சம் கூட மாறியதாக தெரியவில்லை.
நூற்றாண்டுக்கு முந்தைய பகுத்தறிவு கோட்பாடுகளையே இன்னும் பின் பற்றுகிறார்கள்.

ஆத்மீகவாதிகள் அல்லது சமயவாதிகள் எப்படி எப்படியெல்லாம் அறியாமையில் மூழ்கி உள்ளார்களோ அவர்களை போலவே இந்த பகுத்தறிவுவாதிகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு இறுகிய  நிலையில் உள்ளதாகவே தெரிகிறது.
இது கொஞ்சம் இடக்கு மிடக்கான கருத்தாக தோன்றலாம்.
 இவர்களின் பகுத்தறிவு பெரும்பாலும் தந்தை பெரியாரின்  கருத்துக்களோடு  ஒத்து  இருக்கிறது,
தந்தை பெரியாரின்  சுயமரியாதை  போராட்டம் ஜாதி அடக்குமுறைக்கு எதிராகவே  ஆரம்பிக்கப்பட்டது.

Thursday, February 19, 2015

Thought is a Invitation எண்ணங்கள் எல்லாமே சம்பவங்களுக்கான அழைப்பிதழ்கள்தான்

உங்களை நோக்கி வரும் நிகழ்சிகள் அல்லது சம்பவங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழை பெற்ற பின்பே வருகின்றன.
உங்களுக்கு கிடைக்கும் பொருட்கள் செல்வங்கள் இன்பங்கள் அல்லது துன்பங்கள் எல்லாமே உங்கள் அழைப்பிதழ் கிடைக்காமல் உங்களை நோக்கி வரமுடியாது. இது நிச்சயமான உண்மையாகும்
ஒருவரின் காதலோ அல்லது கோபமோ மட்டும் அல்லாது விபத்தும் லாட்டரி அதிஷ்டமும் கூட உங்கள் அழைப்பிதழை பெற்று உங்கள் அனுமதியுடன்தான் உங்களை வந்தடைகின்றது.
இதை விளங்கி கொள்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால் , நீங்கள் உங்களை அறியாமலேயே அழைப்பிதழ்களை அள்ளி வீசி கொண்டிருக்கிறீர்கள்.
உங்களுக்கு விருப்பமான விடயங்களுக்கும் வீசுகிறீர்கள்.
உங்களுக்கு விருப்பமே இல்லாத விடயங்களுக்கும் கூட அழைப்பிதழ்களை அள்ளி அள்ளி வீசுகிறீர்கள்.
நீங்களே அழைப்பை அனுப்பி அனுமதியும் கொடுத்துவிட்டு பின்பு எனக்கு ஏன் இது வரவேண்டும் அல்லது இப்படி நடக்கவேண்டும் என்று உங்களை நீங்களே கேள்வி கேட்டு பதில் கிடைக்காமல் குழம்புகிறீர்கள்.
தெரிந்தோ தெரியாமலோ உங்கள் மனதில் வந்து போகும் எண்ணங்கள் எல்லாமே மின்சாரம்தான் . அவை மிகவும் சக்திவாய்ந்த தொழிற்சாலைகள்தான் .
இந்த பிரபஞ்சத்திற்கு நல்லது கெட்டது விரும்பியது வெறுத்தது என்று ஒன்றும் கிடையாது.
உங்கள் மனம் என்ற தொழிற்சாலையில் வரும் மூலபொருள் அதாவது எண்ணங்கள் எல்லாமே  சம்பவங்கள்  அல்லது பொருட்களாக உருப்பெற்று வெளியேவரும் .

Friday, February 6, 2015

பக்தி என்றால் என்ன? பயம் என்றால் என்ன? இரண்டும் ஒன்றுதான்!

பக்தி என்ற சொல்லை கண்டு பிடித்தவர்தான் மனிதர்களிலேயே மிகவும் போலியான மனிதர். உள்ளுக்குள் இருக்கும் பயத்தை வெறும் மினுங்கல் பூச்சு பூசி வெளிப்படுத்த கண்டு பிடிக்கப்பட்டது தான் இந்த பக்தி என்ற சொல். அன்பு என்பது உண்மையில் தானாகவே வரவேண்டியது அது ஒன்றும் தேவாரம் பாடி வரவழைக்க முடியாது. நெஞ்சு நிறைய பயம் உள்ளவரை நிரந்தர அடிமையாக்க உருவாக்கப்பட்ட சொல் இது. ஒரு வாகனத்தின் உதிரிப்பாகம் அந்த வாகனத்தின் மீது பக்தி கொள்ளுமா? பல உதிரிப்பாகங்களும் சேர்ந்தது அல்லவா ஒரு வாகனம் ? தான் வேறு வாகனம் வேறு என்று உதிரிப்பாகங்கள் எண்ணுவதில்லையே ? அப்படி எண்ணி உதிரிப்பாகங்கள் ஒவ்வொன்றாக பிரிந்து போய்விட்டால் அது ஒரு வாகனம் அல்லவே? முழு பிரபஞ்சமும் ஒரு வாகனம் போல இயங்கும் இயங்கு சக்தி அல்லவா ? அதில் உள்ள சகல உதிரிப்பாகங்களும் பிரபஞ்சத்தின் பங்காளிகள் அல்லவா ? பங்காளிகள் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் இருப்பது இயல்புதானே? இதில் ஏன் பயம்/பக்தி வரவேண்டும் ? இந்த பயத்தால் யாருக்கு லாபம் ?

எல்லோருக்கும் இறுதியில் இனாமாகவே கிடைக்கப்போகும் காரட் அதுதான்...

ஆத்மானந்தம் ஆத்மானுபூதி அல்லது ஸ்திதப்ரக்ஞை என்றும் ஆங்கிலத்தில் self realization or Enlightenment என்றும் பொதுவாக குறிப்பிடப்படுவது  மனத்தின் இருப்பு  இல்லாத ஒரு நிலையில்  ஆத்ம அனுபவித்தில் லயித்திருக்கும்  நிலையாகும்.
இந்த உன்னத நிலையினை அடைவதற்காக பக்திமார்க்கம்  யோக மார்க்கம் ஞான மார்க்கம் தியான மார்க்கம் என்று பலவிதமான வார்த்தைகளில் குறிப்பிடப்படும்  வழிகளை சிரத்தையாக கடைப்பிடித்து மனித பிறவியின் உன்னத நிலையை அடையவேண்டும் என்றுதான் எல்லோரும் போதிக்கிறார்கள்.
இது  சுத்தமான வடிகட்டின  பித்தலாட்டமாகும்.
இந்த சமய குருமாரும் சாமிகளும்  ஆசாமிகளும் குறிப்பிடும் இந்த ஞானம் அல்லது வெங்காயம் எனப்படுவது அப்படி ஒன்றும் தேட கிடைக்காத பெரும் நிதியம் அல்ல.
எல்லோருக்கும் இறுதியில் இனாமாகவே கிடைக்கப்போகும் காரட் அதுதான், நீங்கள் வேண்டாம் என்றாலும் அந்த காரட் உங்களுக்கு கிடைக்க போகிறது என்பதே உண்மை, இதை மிகவும் Authentic க்காகவே சொல்கிறேன் . நம்புவதும் நம்பாததும் உங்கள் இஷ்டம் , எனக்கு ஒரு நஷ்டமும் இல்லை.

Friday, December 19, 2014

நாம் உலகை ரசிக்க வந்த ரசிகர்கள் ! ஆத்மாக்கள் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமே!

நான் இப்போது தெரிவிக்க போகும் கருத்து உங்களில் அநேகருக்கு ஏற்றுகொள்ள முடியாத கருத்தாகும் . மிகவும் பழகி போன ஒரு கோட்பாட்டை எழுந்த மானத்தில் தூக்கி எறிவது சுலபம் அல்ல. மிகவும் மெதுவாக படிப்படியாக தான் ஆழமாக பதிந்து விட்ட கோட்பாடுகளை மறு பரிசீலனை செய்ய முடியும் .
அடிப்படையில் எனக்கு பொறுமை இல்லை. தெரிந்ததை அல்லது நான் நம்புவதை எவ்வளவு விரைவாக வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு விரைவாக வெளிப்படுத்துவது. எனது சுபாவமாகும் .
அதிகம் யோசிக்கும் பொழுது நான் சுயநலவாதி ஆகிவிடுகிறேன். எனது கருத்தை நான் வெளிப்படுத்துவதால் சமுகத்தில் எனது கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டு விடும் என்ற பயம் அல்லது தயக்கம் என்னை  மௌனமாக்கி விடும் .
காலாகாலமாக நாம் எமது உடலுக்கு உரிய முதல் இடத்தை கொடுக்கவில்லை. அனேகமாக கடவுளுக்கு அல்லது நமது வழிகாட்டி குருவானவர் போன்றவர்களுக்கு முதல் இடத்தையும் அல்லது நமது ஆத்மாவுக்கு முதல் அல்லது இரண்டாவது இடத்தையும் கொடுத்து வந்துள்ளோம்
உண்மையில் எமது உடலுக்கு மிகவும் கீழான ஒரு ஸ்தானத்தையே வழங்கி வந்துள்ளோம்.
ஏனெனில் உடல் அழியக்கூடியது  ஆனால் ஆத்மா அழியாது கடவுள் அழியாது குருவானவர் அழியாதவர் என்பது போன்ற கோட்பாடுகள் எமது மனதின் ஆழத்தில் பாதிக்கப்பட்டு உள்ளது.
இது உண்மையில் மிகவும் மோசமான தவறான கோட்பாடாகும்.
உடலை மேன்மை படுத்தாமல் ஆத்மாவை அல்லது கடவுளை மேன்மை படுத்துவிட்டோம்.
ஆத்மா அல்லது கடவுள் என்று ஒன்றுமே இல்லை என்று நான் கூறவரவில்லை.
ஆனால் இங்கே இப்போது நாம் வாழ்ந்து கொண்டு இருப்பது எமது உடல் மூலம்தான் .
எமது பிறவியின் நோக்கமும் இந்த அற்புதமான உடல் மூலம் இந்த வாழ்வை வாழ்ந்து எம்மை சுற்றி உள்ள அற்புதங்கள் எல்லாவற்றையும் ரசித்து மகிழ்வதற்கே.
குதிரையின் கழுத்தில் கட்டப்பட்ட காரெட் கிழங்கு போன்று எமது கழுத்துக்கு முன்பும் ஆத்மா கடவுள் சுவர்க்கம் போன்ற சாக்கிலேட்டுக்கள் கட்டப்பட்டுள்ளன .அவற்றை நோக்கி நாம் ஓடிகொண்டே இருக்கிறோம் ,
வாழ்வு முழுவதும் எமக்கு முன்பே கட்டப்பட்டுள்ள  சாக்கிலேட் இனிப்புக்களை நோக்கி ஓடிகொண்டே வாழ்வும் முடிந்து விடுகிறது.
கண்ணுக்கு முன்பே தெரியும் அற்புதத்தை அழகை ரசிக்க மறந்து எங்கே எப்போதோ யாரோ சொன்ன அம்புலிமாமா  கதைகளை நம்பி எல்லோரும் சென்று கொண்டிருக்கிறார்கள் போல தான் தெரிகிறது.
சொல்லப்பட்ட கதைகள் எல்லாம் இரவல் கதைகள்தான்.
ஒருவரினதும் சொந்த அனுபவமோ சொந்த புத்தியோ இல்லை என்பதை இங்கே நான் குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது.
நான் சொல்வது மட்டும் இரவல் அனுபவம் இல்லையா என்று நீங்கள் கேட்டால் அது மிகவும் நியாயமான கேள்விதான்.
நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் பதில் சொல்லவேண்டியது எனது கடமை.
ஆம் எனது சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே சொல்கிறேன்.

Thursday, November 13, 2014

Image Trap ! இமேஜ் பற்றிய பயம் ஒரு பொறி ! இந்த பயம் இருந்தால் No Creativity?

பிறர் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் பலவேளைகளிலும் எமக்கு ஒரு சிறையாகி விடுகிறது, எம்மை பற்றி நாமே கருதிக்கொள்ளும் தோற்றங்களும் பலவேளைகளில் எம்மை நகரவிடாமல் செய்து விடுகிறது,
பிறரின் அபிப்பிராயங்கள் எமது தீர்மானங்களின் மீது பாதிப்பை உண்டு பண்ணுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது,
அதன் காரணமாகவே பல சமயங்களில் நாம் நாமாக இல்லாமல் இருக்கிறோம்.
பிறரின் அபிப்பிராயங்கள் நமது மூளையை பல சமயங்களிலும் கழுவி விடுகிறது.நம்மை அறியாமலேயே  நாம் எமது சுய புத்தியை அல்லது சுய விருப்பத்தை மீறி நடந்து கொள்கிறோம்

ஏனெனில் பிறர் எம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதில் எமக்கு அவ்வளவு அக்கறை.
பிறரின் அபிப்பிராயங்களுக்கு நாம் ஏன் பயப்படுகிறோம் ?
நாம் சுயமாக சுதந்திரமாக சிந்திக்கும் போதெல்லாம் சமுகத்தை நாம் வழிநடத்துகிறோம்.
பிறரின் அல்லது சமுகத்தின் அபிப்பிராயங்களுக்கு ஏற்ப சிந்திக்கும் பொழுதெல்லாம் நம்மை சமுகம் வழிநடத்துகிறது.

Monday, October 6, 2014

ஊரில் ஒரு முகம் ! வெளிநாட்டில் வேறொரு முகம் ! ஊருக்கு வேறு ஒரு உபதேசம் வேண்டாம் !

அண்மையில்  பாடகர்  யேசுதாஸ்  இந்திய பெண்கள்  கலாச்சாரத்தை பேணும் முகமாக ஜீன்ஸ் அணியக்கூடாது . ஆண்களின் மனம் கிளர்ச்சி அடையும் வண்ணம் பெண்கள் தங்கள் உடம்பை காட்டாது கூடுமானவரை மறைக்க வேண்டும் என்று தனது  கருத்துக்களை கூறியிருந்தார். இவரோ  வருஷத்தில் பாதி நாட்கள்   அமெரிக்காவில்  ப்ளோரிடா மாநிலத்தில் நன்றாக காலூன்றி இருப்பவர். ஊருக்கு வருவது  பணம் சம்பாதிக்கவும் மற்றும் ஒரு ஜாலி ட்ரிப் ஆகவும்தான் ,
தனது  அமெரிக்க  வாழ்க்கை முறை  இந்திய மக்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்று இவர் இப்படி  கலாசார பாரம்பரிய வேஷம் போடுகிறார். ஏனென்றால் இவரது  வருமானம் புகழ் எல்லாம் சாஸ்திரீய சங்கீதத்தில் தங்கி இருக்கிறது,  பலர் இவர் மாமிசம் உண்ணாத சுத்த  ஆசார சீலர் என்றுவேற நம்புகிறார்கள் .( சிக்கென் சாப்பிடுவதை நானே கண்டேன் )அதுவே இவருக்கு வியாபாரம்.
நான் சொல்ல வந்த விடயம் யேசுதாஸ் பற்றியது அல்ல . ஆனால் அது சிறந்த ஒரு உதாரணம் .
 நம்மவர் பலரும் வெளிநாடுகளில்  முழுக்க அல்லது பாதி பாதி அளவும் மேலை நாட்டு கலாசார விழுமியங்களின் நல்ல தன்மைகளை புரிந்து வாழுகிறார்கள்.
அவர்களுக்கு ஒரு குற்ற உணர்ச்சி இடையிடையே வருகிறது.
தங்கள்  சுதந்திர மேல்நாட்டு வாழ்க்கை முறை எங்கே ஊரில் உள்ள உறவினருக்கு தெரிந்து விடுமோ என்று ஏனோ பயப்படுகிறார்கள்.

Monday, June 23, 2014

உன்னை சுற்றி உள்ள பிரபஞ்சம் சதா உன்னுடன் பேசிக்கொண்டே இருக்கிறது ! உனக்குத்தான் கேட்கவில்லை ?

நீங்களோ நானோ ஒரு போதும் தனியாக இல்லை. எம்மை சுற்றி உள்ள இந்த பரந்த விரிந்த பிரபஞ்சம் சதா எங்களுடன் பேசுகிறது சிரிக்கிறது இடையிடையே கோபிக்கிறது இன்னும் என்னனவோ உணர்ச்சிகளையும் செய்திகளையும் எம்மை நோக்கி வீசிக்கொண்டே இருக்கிறது.
நாம் தான் கண்களையும் காதுகளையும் மட்டுமல்லாமல் மனதையும் மூடிக்கொண்டு விட்டோம், அதனால் அவற்றின் இனிய சங்கீதத்தை எம்மால் ரசிக்க தெரியாமல் இருக்கிறது.
உண்மையில் நாம் வேறு பிரபஞ்சம் வேறல்ல . இன்னும் சரியாக சொல்லப்போனால் எமது கண்களினூடாக இந்த உலகத்தை பிரபஞ்சம் பார்க்கிறது , எமது காதுகளினூடாக இந்த உலகின் இனிய நாதத்தை அது கேட்கிறது, எமது மனதின் ஊடாக அதுவும் தனது உணர்வுகளை சிந்தனைகளை அனுபவிக்கிறது.
கோடானு கோடி உயிரனங்கள் எல்லாம் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பக்கங்களாகும் .
எமக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் இடையே உள்ள உறவு அதி அற்புதமானது .அதை புரிந்துகொண்டவர்கள் அதிஷ்டசாலிகள்.
எமது ஒவ்வொரு அசைவும் பிரபஞ்சத்தின் நோக்கத்திற்கும் எமது நோக்கத்திற்கும் இசைவாக இருக்கும் பொழுது நாம் நினைத்ததெல்லாம் நிறைவேறுகிறது,
எமது வெற்றி தோல்வி எல்லாம் எம்மீது தான் தங்கி இருக்கின்றது.
ஆனால் எமக்குள் இருக்கும் பிரபஞ்சத்தின் உணர்வும் எம்மோடு கலந்து தான் இருக்கிறது,  அதை புரிந்து கொள்ளாவிடில். எமது விருப்பங்களும் விளைவுகளும் ஒன்றோடு ஒன்று முரண்பட்டு கொண்டே தான் இருக்கும்.
நாம் தவறான பாதையில் அடியெடுத்து வைக்கும் போதெல்லாம் எம்மை சுற்றி உள்ள பிரபஞ்சமானது எமக்கு பலவழிகளிலும் நல்ல வழியை காட்ட முயற்சிக்கும் . அதையும் மீறி நாம் தவறான பாதையில் சென்றாலும் எம்மை காப்பாற்ற அது சதா சரியான வழியை காட்டவே முயற்சிக்கும்,  ஏனெனில் அது வேறு நாம் வேறல்ல . ஆனால் தவறையே ரசிக்க நாம் முடிவு செய்துவிட்டால் அதற்கும் அது உதவி செய்யும்,  அந்த தவறில் இருந்து நாம் ஒரு அற்புதமான பாடத்தை படிக்கலாம் அல்லவா ? அதுவும் கூட ஒரு நன்மைதானே ?

Saturday, June 14, 2014

உலகத்தையே உன் தலையில் சுமப்பதாக எண்ணாதே, உண்மையில் உலகம்தான் உன்னை சுமக்கிறது ,

எதிலும் மிகவும் சீரியஸாக இருப்பது என்பது ஒருவரின் நேர்மை , உண்மை , விசுவாசம் பணிவு தன்னம்பிக்கை போன்ற மிக உத்தமமான குணங்களின் அடையாளம் என்று நாம் பொதுவாக எண்ணுகிறோம்.

சீரியஸாக இருபதற்கு பெரும்பாலோர்  கவனமாக இருத்தல் என்ற பொருளை  கொண்டுள்ளனர் .
எந்த விடயத்திலும்  தேவை படும் அளவில் கவனமாக இருக்கிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு எதிலும் மகா சீரியஸாக இருப்பதைதான் நான் இங்கு குறிப்பிட வருகிறேன், 

 அதிலும் குறிப்பாக நான் சார்ந்த மக்களின் ஜனத்தொகையில் கணிசமானோர் பெரும்பாலும்   பொல்லாத சீரியஸ் பிராணிகள்தான் .

படிப்பதிலே கவனம் சாமி கும்பிடுவதில் கவனம் உழைப்பதில் கவனம் பிறரோடு பழகுவதில் கவனம் சம்பாதித்த காசை சொத்துக்களை சேமித்து வைப்பதில் கவனம் என எதிலும் கவனம் கவனம் கவனம்தான் ,

Sunday, May 25, 2014

பயம் வாழ்வை கொண்டுவராது முடிவைத்தான் கொண்டுவரும், அன்புதான் வாழ்வை கொண்டு வரும் .

எண்ணங்களை விருப்பங்களை தீர்மானங்களை மறைப்பது நமது
சுபாவமாகும் . தவிர்க்க முடியாத நேரங்களில்  மறைப்பது நல்லது என்று நாம் வாதிடகூடும்.
மனிதர்கள் அடிப்படையில் மிகவும் பயந்த ஒரு ஜீவராசியாகும் .
நாம் ஆதியில் வேட்டை ஆடும் கலாசாரத்தை கொண்டிருந்தோம் . அதன் தாக்கம் இன்னும் எமது மனதில் உறங்கி கொண்டுதான் இருக்கிறது.
அதனால்தான் நாம் மிகவும் பயந்த ஒரு பிராணியாக இருக்கிறோம். ஆனால் எமது பயத்தை  வெளியே காட்டி கொள்ளாமல் நடிப்பதில் மிக பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்து விட்டோம்.
எமது மனதில் சதா தோன்றும் சிறு சிறு சலனங்களும் கூட பயத்துடன் கலந்தே வருகிறது.
நாம் என்னதான் அறிவு பண்பு  என்றெல்லாம் நீட்டி முழக்கினாலும். நாம் என்னவோ எல்லாவற்றிகும் பயபடுகிறோம்.
இந்த FEAR FACTOR எம்மை சரியான பாதையில் பயணிக்க விடாது,
பயம் என்பது ஒரு சாதாரண உணர்வு அல்ல.
இது ஒரு முக்கியமான காந்தம் போன்ற உணர்வு.  அடுத்த முக்கியமான உணர்வு அன்பு ஆகும் .
நமது சகல எண்ணங்களும் கருமங்களும் பேச்சுக்களும் ஒன்றில் அன்பின் அடிப்படையானதாக இருக்கும் , அல்லது பயத்தின் பால் பட்டதாக இருக்கும்.
இவை இரண்டில் ஏதாவது ஒரு உணர்வின் அடிப்படையிலே நமது சகல காரியங்களும் எண்ணங்களும் உருவாகுகின்றன.
அன்புக்கும் பயத்திற்கும் இடையே நடக்கும் நிரந்தர யுத்தம் எமது ஒவ்வொரு உணர்ச்சியிலும் நடை பெறுகிறது.
எப்பொழுதெல்லாம் அன்பு  வெல்கிறதோ அப்போதெல்லாம் நாம் மகிழ்ச்சியாக வெற்றிகரமாக வாழ்கிறோம்.
 ஆனால் துரதிஷ்ட வசமாக அன்பு அதிகம் வெல்வதில்லை .
பெருவாரியான தருணங்களில் எமது பயம் தான் வெல்கிறது. ஏனெனில் நாம் வாழும் இன்றைய உலகம் பெரும்பாலும் பயத்தின் அடிப்படையிலேயே கட்டி எழுப்பட்டிருக்கிறது.
நாம் அன்பு  காதல்  பாசம்  நேசம்  என்றெல்லாம்  வெளிப்படுத்திகொள்ளும் பலதருணங்களில்  உண்மையில்  அந்த அன்பின் முகமூடியை அணிந்து கொண்டு எமது பயத்தின் அடிப்படையிலேயே இயங்குகிறோம்.

Saturday, May 24, 2014

நமது உடலானது ஒரு கூட்டு நிர்வாக பொறிமுறையில் தான் இயங்குக்கிறது .Collective orgnaism அல்லது Supper Organism

A superorganism is an organism consisting of many organisms. The term was originally coined by
James Hutton (1726-1797), the "Father of Geology" in 1789. See the discussion of Geophysiology for more on the use of this term in geological and ecological contexts.
எங்கள் உடம்பில் எவ்வளவு ஜீவராசிகள் உயிர்வாழ்கின்றன தெரியுமா ?  நமது உடலில் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ விதமான உயிரனங்கள் வாழ்கின்றன . அவற்றிக்கு எமது உடலே உலகம் அல்லது முழு பிரபஞ்சம் .
தாம் வாழும் உலகம் உண்மையில் ஒரு மனிதனின் உடல்  என்பதை அவைகளால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது,
அப்படி தப்பி தவறி எதோ ஒரு உயிரினம் அறிவாளியாக அல்லது ஞானியாக உருவாகி இது போன்ற கேள்விகளை தனக்கு தானே அல்லது தானே நம்பும் அதன் உலகத்தை அதாவது நமது உடலை கேட்டால் பதில் கிடைக்குமா ?
அந்த உயரினங்கள் கேள்விகள் கேட்டு அவற்றிக்கு பதிலும் கிடைத்தால் கூட அவற்றை அந்த நுண்ணிய உயிர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.
ஏனெனில் அவை ஒரு போதும் அவர்களின் வாழ்வுக்கு ஆதாரமாக உள்ள மனிதனின் உடலை அதாவது அவற்றின் பிரபஞ்சத்தை / கடவுளை அவை ஒரு போதும் நேரில் காணவில்லை கேட்கவும் இல்லை.
அதீதமான கற்பனை அல்லது அறிவு போன்ற ஏதாவது ஒன்று அளவுக்கு அதிகமாக உள்ள ஜீவன்களால் சிலவேளை  புரிந்து புரியாமலும்  ஏதோ ஒரு விடயம் தங்களை சுற்றி ஒரு மர்மமாக இருப்பதை வியப்போடு நோக்கவும் கூட்டும்.
 உண்மையில் மனிதரின் உடலில் வாழும் அந்த ஜீவராசிகளின் நிலையில்தான் நாம் உள்ளோம் ,
எம்மை சுற்றி உள்ள இந்த உலகத்தை அல்லது முழு பிரபஞ்சத்தை பற்றி எமக்கு என்ன தெரியும் .?
ஏதோ கொஞ்சம் தெரியும்,
நிச்சயமாக தெரிய வேண்டிய விடயங்கள் மிக மிக அதிகமாக இருக்கிறது,
எமது கற்பனைக்கு எட்டாத அளவு  விரிந்த பிரபஞ்சம் எனென்ன கோட்பாடுகள் அல்லது இயற்கை விதிகளின் அடிப்படையில் இயங்குகிறது  என்பது பற்றி நாம் அறிந்திருப்பது வெறும் ஆரம்ப நிலையில் உள்ளனவே ஆகும்.
நாம் எமது பிறவியின் தன்மை பற்றியோ அல்லது நாம் வாழும் இந்த உலகம் பற்றியோ அறியவேண்டியது  மிகவும் அதிகம்.
எமக்கு தெரியாத எதையும் தூக்கி எறிந்து விடும் தற்குறி தனம் தற்காலத்து மனிதரிடம் மிக அதிமாக காணப்படுகிறது,  அதன் காரணமாகவும் பல விடயங்களை நாம் அறிய கூடிய வாய்ப்பை இழந்து விடுகிறோம் .
நமது உடலானது உண்மையில் ஒரு கூட்டு நிர்வாக பொறிமுறையில் தான் இயங்குக்கிறது .Collective orgnaism அல்லது Supper Organism போன்ற  பதங்களால் இது  குறிக்க படுகிறது ,
இந்த கூட்டு நிர்வாக பொறிமுறையில்  ஒவ்வோர் ஜீவராசியும்  தனது  பங்கை மிக சரியாக  நிறைவேற்றும் பொழுதுதான்  எமது  ஒட்டு மொத்த உடலினதும் மனத்தினதும்  வாழ்வு  எமது நோக்கத்தை ஈடேற்றும் விதமாக அமைகிறது,
இதே போன்றுதான் நாம் வாழும் இந்த உலகமும்  இயங்குகிறது. நாம் மட்டுமே சிந்திக்க தெரிந்த பிராணி என்று எண்ணுகிறோம் .எம்மைவிட எமது வாழ்வை பற்றி இந்த பிரபஞ்சத்திற்கு அல்லது உலகத்திற்கு  பெரிய பொறுப்பும் கனவும் இருக்கிறது,
மழையும் வெய்யிலும் காற்றும்  எம்மை  கோடானு கோடி ஆண்டுகளாக தாலாட்டி சீராட்டி வளர்த்து வருகிறதே ?
அது எவ்வளவு புத்திசாலியும் கடமை தவறாத கர்மயோகி என்று ஒரு கணம் சிந்தித்ததுண்டா ?
 எம்மை சுற்றி உள்ள  காற்று வானம் நிலம் நீர்  மற்றும தாவரங்கள்  உயிரனங்கள் எல்லாம் எவ்வளவு அற்புதமாக சிந்தித்து செயலாற்றுகின்றன?
இந்த  அற்புதமான சிறந்த  நிர்வாக  பொறி முறையே கடவுள் என்றும் சொல்லாலாம் . அல்லது இயற்கை என்று சொல்லலாம். விரும்பிய பேர் கொண்டு  குறிப்பிடலாம் .
எம்மை சுற்றி உள்ள இந்த பொறி முறையானது  சகல ஜீவராசிகளின்  வாழ்வை  உறுதி படுத்தும் நோக்கத்தோடு இயங்குவதாக தான் எனக்கு தெரிகிறது.
இந்த நோக்கத்தை நாமும்  பின்பற்றும் வரை  எமது வாழ்வும்  மிகவும் உறுதி படுத்தப்பட்டதாக இருக்கும் .
எப்போது எம்மை சுற்றி உள்ள இந்த பிரபஞ்ச இயங்கியல் பொறி முறைக்கு மாறாக நாம் செயல் படுகிறோமோ அப்போதே இந்த அற்புத பொறி முறையிலிருந்து வழுக்கி விழ தொடங்குகிறோம்

Wednesday, April 30, 2014

பழைய கோட்பாட்டு மயக்கம் ? பழமை என்பதாலேயே அவை புனிதம் அல்ல !

பழமையான தத்துவங்கள் பழமையான கோட்பாடுகள் எல்லாமே மிகவும்
புனிதமானவை போற்றுதற்கு உரியவை .
ஒரு போதும் அந்த பழமையான தத்துவங்களை நாம் கைவிடவே கூடாது

சனாதன தர்மங்கள் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அற்புத கருத்துக்கள் ஆகும் ,
இதுதான் நமக்கு காலகாலமாக இந்த சமூகமும் சமயமும் நமக்கு கற்று தந்திருக்கும் பாடம்.

இது மிகவும் பிற்போக்கு தனமான ஒரு பாடமாகும் .

சனாதனம் என்றாலே கைகூப்பி தொழவேண்டும் அர்ச்சனை செய்யவேண்டும் என்றால்லாம் பெருசுகள் வரிந்து கட்டி கொண்டு வந்து விடுவார்கள்.
இந்த சனாதனம் என்று இவர்கள் எதை குறிப்பிடுகிறார்கள்?

கணவன் இறந்தால் அவனது எரியும் சவத்தோடு மனைவியும் சேர்ந்து எரிந்து சாம்பலாக வேண்டும் என்பது சனாதன தர்மம், அப்படி எரிந்து சாம்பலானவள் சதிமாதா என்று போற்ற படுவாள் .

ஒவ்வொரு ஜாதியும் ஒவ்வொரு அந்தஸ்தில் வைக்கப்படுவதும் சந்தன தர்மம் அதாவது பிராமணன் கடவுளின் தலையில் இருந்து பிறந்தவனாம்.தாழ்ந்த ஜாதிக்காரன் காலில் இருந்து பிறந்தவனாம் , இது ஒரு சனாதன தர்மம் .இந்த கண்றாவி கோட்பாடுகளையும் நமது தலையில காவுகிறோம் .

Tuesday, March 4, 2014

விஞ்ஞானத்தை விடுதலை செய்யுங்கள் !

True sign of intelligence is not knowledge but imagination. ஆத்மீக போர்வையில் இருக்கும் அறியாமை அல்லது போலியான சாமியார்களை / மனிதர்களை பற்றி எல்லாம் தற்போது அநேகருக்கு தெரிந்திருக்கிறது.
மனிதகுலத்தை எப்படியாவது இருட்டில் வைத்திருக்க விரும்பும் இந்த வியாபாரிகளை பற்றி எல்லாம் எழுதி எழுதி எனக்கு சற்று சலிப்பு ஏற்பட்டுவிட்டது .
எவ்வளவுதான் எழுதினாலும் பேசினாலும் நித்திரையை விட்டு எழுந்திருக்க மாட்டேன் என்று சிலர் பிடிவாதமாக இருப்பது மிகபெரும் அறியாமைதான்.
அவர்களை விட்டுவிடுவோம். இந்த பகுத்தறிவாளர்கள் என்று பெருதும் கருதப்படுபவர்கள் தங்களை அறியாமலேயே வேறு ஒரு இருட்டில் இருப்பதாகத்தான் எனெக்கு எண்ணத்தோன்றுகிறது .
குறிப்பாக தமிழ்நாட்டில் அல்லது இந்திய துணை கண்டத்தில் இருக்கும் பகுத்தறிவாளர்களின் கருத்துக்கள் பலவும் மிகவும் காலம் கடந்த கோட்பாடுகளாகும்.
ஏனெனில் இவர்களால் இடித்துரைக்க படும் மூட நம்பிக்கைகள் பல தடவைகளில் இவர்களுக்கு புரியாத அல்லது இன்னும் அறுதி இட்டு கூற முடியாத விஞ்ஞான உண்மைகளாக இருக்கிறது.
எது மூட நம்பிக்கை என்று விஞ்ஞான பூர்வமாக ஆய்வு செய்வதற்கு ஜாதியும் சமயமும் பெரும் தடையாக இருக்கிறது .

மேல்ஜாதி ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கு சமயத்தை ஒரு சாதனமாக  பார்பனர்கள் பயன்படுத்தும் காரணத்தால் சமய கோட்பாடுகள் எப்போதும் உண்மையை மனிதன் கண்டறிவதற்கு தடையாகவே இருந்திருக்கின்றன.