Wednesday, February 27, 2019

ஒரு உடல் ... ஒரு உள்ளம் .. ஒரு உலகம் .. உயிர் = உன் இருப்பின் தொடர்ச்சி ..



மனித வாழ்வின் மர்மங்களை அக்கு வேறு ஆணிவேராக பிரித்து மேய்ந்து பார்க்கும் முயற்சியை பொதுவில் யாரும் திறந்த மனதோடு அணுகுவதில்லை.
அதற்கு காரணம் அது பற்றி அவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகளே.
அவை அவர்களின் அறிவுத்தாகத்தை தீர்த்து கொண்டிருப்பதாக அவர்கள் எண்ணுகிறார்கள்!
இந்த நம்பிக்கைதான் அறிவுக்கு மிகப்பெரும் தடை.
பிறப்பு, இறப்பு, மறுபிறவி , உயிர்,; கடவுள் போன்ற விடயங்களை பற்றி சிந்திக்க தொடங்கும் போதே மதங்கள் அவை பற்றி வகுப்பெடுத்த கதைகள் ஞாபகத்திற்கு வந்துவிடும் .
இந்த கதைகள் எமது ஆய்வுகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தவே விடாது.
இது ஒரு ஆபத்து என்றால் அடுத்த ஆபத்து இதை எல்லாம் பொத்தாம் பொதுவாக மூர்க்கமாக மறுத்து வேறொரு பக்கத்தில் இருந்து வாதங்கள் வந்துவிடும் .
இதுவும் உண்மையை அலசி ஆராயும் வாய்ப்புக்களை மறுத்து விடும் தடைதான்.
இந்த இருபகுதியினரின் கோட்பாடுகளையும் மீறித்தான் உண்மையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. .
இந்த வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம் என்ற மிகப்பெரிய கேள்வி இருக்கிறது.
இதற்கு சரியான பதில் கூறக்கூடிய தகுதி அந்த கேள்வியை கேட்பவரை சுற்றி உள்ள பிரபஞ்சத்திற்கு மட்டுமே இருக்கிறது.;
ஆனால் கேள்விக்கு பதிலை ஒருவர் தேடும் முன்பே மதங்களும் இதர நம்பிக்கைகள் சார்ந்த கோட்பாடுகளும் அவருக்குள் வலிமையாக நுழைந்து விடுகிறது.
இதற்குள் இருந்து ஒரு நேர்மையான ஆய்வாளன் சுதந்திரம் பெறுவது மிக பெரும் சவாலான காரியமாகும்.
இந்த பிரபஞ்சத்தில் ஒரு தொடரோட்டம் ஒன்று ஒயாமல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த தொடரோட்ட்டத்தின் இயங்கு பொறிமுறை எப்படி பட்டது?
இந்த இயற்கையின் விதிகள் என்பது என்ன?
எம்மை சுற்றி இருக்கும் பிரபஞ்சம் அல்லது அண்டம் என்ற இந்த உலகின் இயங்கியல் எப்படிப்பட்டது ? இதன் நோக்கம் என்னவாக இருக்கும்?
நாம் கவனிக்க மறந்த நாடகங்கள் எல்லாம் எமது கண்முன்னே ஒவ்வொரு கணமும் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது,
பிரமிப்பு ஊட்டும் அற்புதங்கள் அவை .
ஒவ்வொரு இலையும் அசைவது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. அதன் பின்னணியில் பெரிய பெரிய பொறிமுறைகளும் பெரும் நோக்கங்களும் இருக்கின்றன.
அந்த இலைகளின் அசைவுக்கு என்னனென காரணங்களோ அதற்கு கொஞ்சம் கூட குறையாமல் எமது உடலின் உள்ளேயும் வெளியேயும் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அசைந்து கொண்டே இருக்கிறது ..
இதை பற்றி எப்பொழுதாவது நாம் சிந்திந்து பார்த்ததுண்டா?
எதுவுமே தற்செயலாகவோ காரணம் இல்லாமலோ அசைவதில்லை அல்லது இயங்குவதில்லை.
இதை புரிந்து கொள்ள எமக்கு போதிய அறிவு இல்லை . ஆனால் இவற்றை ரசிக்க அல்லது வியந்து பிரமிக்க முடியும் .. அதுதான் எமது பிறப்பின் நோக்கமும் கூட.
ஒவ்வொரு உயிரினமும் என்ற வார்த்தை கூட சரியானதா என்ற கேள்வியும் எழுவது இயற்கையே.
ஏனெனில் இந்த உலகின் எது உயிரினம் எது உயிரினம் இல்லை என்பதில் எமக்கு உள்ள புரிதல் ஒரு பூரணத்துவமானதா என்பதில் எனக்கு இன்னும் பதில் இல்லா கேள்விகள் உண்டு.
உயிர் என்பதே உனது இருப்பின் தொடர்ச்சி என்றுதான் அர்த்தம் கொள்ளமுடியும் என்று கருதுகிறேன்.
அதாவது ஐன்ஸ்டீன் கூறிய time- space continnum என்பது போன்ற ஒரு தொடர்ச்சி என்றுதான் எனக்கு தோன்றுகிறது.
ஏனெனில் இந்த பூமி சந்திரன் சூரியன் போன்ற கோளங்கள் எல்லாம் இந்த அண்டவெளியில் சுற்றி கொண்டே இருக்கின்றது அல்லவா?
அவை இயங்கி கொண்டுதானே இருக்கிறது?
இது பதில் அல்ல .இதுவும் ஒரு கேள்வி மட்டுமே.
எனக்கு கண்ணுக்கு தெரிந்த காட்சிகள் செவிக்கு கேட்கும் ஓசைகள் எல்லாம் எதை கூறுகிறது என்ற கேள்விகள் சுற்றி சுற்றி வருகின்றனவே?
எதற்கும் பதில்கள் என்று எதையும் கூற முடியாதே?
பதில்கள் என்று கருதும் ஒவ்வொன்றும் மீண்டும் பல கேள்விகளாக அல்லவா மறுபிறவி எடுக்கின்றன?
உண்மையும் அதுதான்!
ஏனெனில் இது ஒரு தீராத நாடகம்!
இந்த நாடகம்தான் இந்த பிரபஞ்சத்தின் உயிர்த்துடிப்பு!
இதன் நோக்கம்தான் என்ன?
எதற்காக இந்த சூரியன் சந்திரன் உலகம் கோளங்கள் அண்டவெளிகள் காற்று வெளிச்சம் நீர் நிலம் நெருப்பு ஆகாயம் எல்லாம்?
எந்த பதிலும் காணவே முடியாத நாட்டிய நாடகங்கள் இவை!
கேள்வி பதில் என்பது எல்லாம் அபிப்பிராயங்கள் மட்டுமே!
மனிதர்களின் அபிப்பிராயங்களை தாண்டியது வாழ்வின் அர்த்தங்கள்!
இந்த பெரிய பெரிய கேள்விகள் ஆராய்சிகள் எல்லாவற்றிற்கும் ஒரு சிறு முடிச்சு ஒன்று இருப்பது மட்டும் தெரிகிறது .
அந்த சிறு அதி அற்புத முடிச்சுக்கு பெயர் வாழ்க்கை!
மரத்துக்கும் மலைக்கும் காற்றுக்கும் செடிக்கும் கடலுக்கும் குரங்கிற்கும் குதிரைக்கும் மனிதருக்கும் எல்லாவற்றிற்கும் ஒரு அர்த்தம் இருப்பதாக எனக்கு தெரிகிறது.
அந்த அர்த்தம்தான் வாழ்க்கை!
அதில் மட்டும்தான் இந்த பிரபஞ்சத்துக்கு அக்கறை!
பிரபஞ்சத்துக்கு வேறு எந்த அர்த்தமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை!
உண்மை பொய் தர்மம் அதர்மம், நல்லவன் கெட்டவன் , உயர்ந்தது தாழ்ந்தது .பெரிது சிறிது என்று எதுவுமே இல்லை .
புலப்படுவது எல்லாமே காட்சிகள்தான். கேட்பது எல்லாமே ஓசைகள்தான்.
எல்லாவற்றிலும் தெரிவது வாழ்க்கை மட்டுமே!
எல்லாவற்றிலும் இருக்கும் நோக்கம் வாழ்க்கை மட்டுமே!
இந்த பிரபஞ்சத்துக்கு ஏதாவது நோக்கம் இருக்குமென்றால் அது எங்கும் நிறைந்திருக்கும் வாழ்க்கை என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே!
அதில் மட்டுமே பிரபஞ்சத்திற்கு அக்கறை!
வேறு ஒன்றிலும் அதற்கு அக்கறை இருப்பதாக ... எனக்கு ... தெரியவில்லை!
பிரபஞ்சத்தின் நோக்கம் என்று மதங்களும் வழிகாட்டிகளும் ஏதோதோ எல்லாம் கூறி உள்ளார்கள் . பொதுவாக அவை ஒன்றிலும் எனக்கு ஒத்திசைவு இல்லை!
அனேகமாக அவர்கள் எல்லாம் இந்த அழகிய பிரபஞ்சத்தின் வாழ்க்கை பற்றி மனிதர்கள் அறிவதை தடுத்கவே பெரிதும் பயன்பட்டார்கள்.
எமது உடலின் பொறிமுறையை கொஞ்சம் உற்று அவதானித்தால் அது எவ்வளவு அற்புதமான பொறிமுறையையும் ரசவாதங்களையும் தனக்குள் வைத்திருக்கிறது என்ற பிரமிப்பு ஏற்படுகிறது?
நாம் எமது உடலை எவ்வளவோ மோசமாக பயன்படுத்தினாலும் அது மீண்டும் மீண்டும் தன்னை புதிப்பித்து கொண்டு எமது நோக்கத்திற்காக உழைக்கிறது?
எமது நோக்கத்திற்காக அது ஏன் கடுமையாக போராடவேண்டும்?
எமது நோக்கம் எது?
எமது நோக்கம் எமது வாழ்க்கை!
எமது நோக்கதிற்காக எமது உடல் மீண்டும் மீண்டும் தயாராவது என்ன செய்தியை எமக்கு கூறுகிறது?
இந்த அதிசயமிக்க உடல் என்ற பொறிமுறை கூறும் செய்தி " வாழ்க்கை "!
இந்த வாழ்க்கை என்ற பொறி முறை மட்டுமே எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது!
காணும் கல்லிலும் கேட்கும் இடி முழக்கத்திலும் எமக்கு தெரிவது வாழ்க்கை மட்டுமே!
எது வாழ்க்கை எனபதை நாங்கள் பொதுவாகவே மனித வாழ்க்கை என்று மட்டுமே அர்த்தபடுத்தி கொண்டிருக்கிறோம்..
இதில் இருந்து கொஞ்சம் வெளியே வந்து பார்த்தால் தெரியும் கண்ணுக்கு தெரிவது எல்லாமே வாழ்க்கைதான்.
கண்ணுக்கு தெரிவது எல்லாமே பிரபஞ்சம்தான்!
வாழ்க்கை மட்டும்தான் பிரபஞ்சத்தின் நோக்கம்!
பிரபஞ்சம் என்பது வாழ்க்கை மட்டும்தான்!
அந்த வாழ்க்கைக்கு என்னென பொறிமுறை தேவையோ அவற்றைத்தான் பிரபஞ்சம் இயற்றிகொண்டு.. இயங்கி கொண்டு இருக்கிறது!
அந்த நோக்கத்திற்கு இணைவாக இருக்கும் எந்த பொருளும் எந்த சக்தியும் எந்த நோக்கமும் அதனோடு சேர்ந்து இயங்கி கொண்டிருக்கும்!
இந்த பொறிமுறை மட்டுமே எனக்கு தெரிந்த பிரபஞ்ச நோக்கம்!
இந்த வாழ்க்கை என்ற பொறிமுறைக்கு இசைவாக இல்லாதவை எல்லாம் அதன் சிருஷ்டி நோக்கத்தை விட்டு அடுத்த கட்டத்திற்கு சென்று விடும்.
இது ஒரு சுற்று வட்டம் .
எம்மை சுற்றி உள்ள வாழ்க்கை பொறிமுறைக்கு நாம் இசைந்து இயங்குவரை எமது வாழ்க்கையும் இயல்பாகவே இருக்கும் !
ஒரு உடல் ... ஒரு உள்ளம் .. ஒரு உலகம் .. உயிர் = உன் இருப்பின் தொடர்ச்சி ..

No comments: