Saturday, May 13, 2017

உனது உடலைவிட உனக்கு வேறு பெரிய சொத்து கிடையாது.


இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிரினத்திற்கும் தங்கள் உடல்தான் அதிக பெறுமதி வாய்ந்த தலையாய சொத்தாகும்.  இந்த உலகத்தில் உனது உடலைவிட உனக்கு பெரிய சொத்து வேறு எதுவும் கிடையாது.
எனவேதான் எல்லா உயிர்களும் தங்கள் உடலை பாதுகாப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றன.
ஆனால் மனிதர்கள் மட்டும் இந்த இயற்கை விதியில் இருந்து விலகி தங்களை ஏதோ ஒரு அடிப்படை அறிவாளிகள் என்பதாக எண்ணிக்கொண்டு தங்கள் உடலை தாங்களே மிகவும் பாரதூரமாக சிதைக்கின்றனர்.
மனித உடலின் பெறுமதியை மிகவும் மலினப்படுத்திய முதல் குற்றவாளிகள்  மதவாதிகள்தான்.
மதங்கள் உருவாக்கிய காலச்சாரம் பாரம்பரியம் போன்றவை எல்லாம்  மனித உடலுக்கு உரிய மரியாதையை வழங்கவில்லை.  உடலை விட ஆத்மா உயர்ந்தது அல்லது அந்த ஆத்மாவை விட கடவுள் பெரியது என்பதாகதான் எல்லா மதங்களும் மீண்டும்  மீண்டும் பிரசாரம் செய்கின்றன
இந்த மதங்களின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் தொடர்ச்சியான பிரசாரங்களால் மனிதமனத்தின் மிகவும் ஆழத்தில் தனது உடல் ஒரு பெறுமதி இல்லாத பொருள் என்ற எண்ணம் பதிந்து விட்டது.
மனிதர்களை நல்வழிக்கு அழைத்து செல்வதாக கூறிகொள்ளும் மதங்கள் இறுதியில் மனிதனின் உடலை வெறும் வழி தேங்காயை எடுத்து தெருவில் உடைப்பது போன்று மனிதர்களின் உடல் பற்றிய கரிசனையை குழி  தோண்டி புதைத்து விட்டன.
உலகில் உள்ள எந்த விலை உயர்ந்த அதி பெறுமதி வாய்ந்த சிலையையும் விட மனிதனின் உடல் அற்புதமான உயிருள்ள சிலையாகும்..
இறைவனை வணங்குவதை விட தமது உடலை முதலில் வணங்குவதே மிகவும் சரியான ஒரு வழிபாடாக இருக்கமுடியும். அதற்கு அடுத்ததுதான் மீது வழிபாடெல்லாம். உடல் இருந்தால்தானே உன்னால் மீதி வழிபாடெல்லாம் தொடர முடியும் !